செய்திகள்

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தடையை மீறி போராட்டம்

Makkal Kural Official

சென்னை, ஜன. 2–

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி உள்ளிட்ட பா.ம.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அண்ணா தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட பல கட்சிகள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் விடுவித்தனர்.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதை கண்டித்து பா.ம.க. மகளிரணி சார்பில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பா.ம.க. சார்பாக பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி தலைமையில் அறிவிக்கப்பட்ட போராட்டத்திற்கு நுங்கம்பாக்கம் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அப்பகுதியில் 300க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் பா.ம.க. மகளிர் அணியினர் தடையை மீறி போராட்டம் நடத்தினர். வள்ளுவர் கோட்டத்துக்கு வந்த சவுமியா அன்புமணி காரிலேயே அமர்ந்து இருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறி உள்ளது. குற்றவாளிகளை கைது செய்யலாமல் எங்களை கைது செய்வதில் என்ன நியாயம்? என்று கேள்வி எழுப்பினார்.

இதனிடையே தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி உள்ளிட்ட பா.ம.க.வினரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் கைது செய்தனர். அவர்களை வாகனங்களில் போலீசார் அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *