சென்னை, ஜன. 4–
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபலமான சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அண்மையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அங்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கின் எப்.ஐ.ஆர் கசிந்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அந்த மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளப்பி பதற்றத்தை ஏற்படுத்திய நபரை பிடிக்க போலீசார் வலைவீசி வருகின்றனர்.