சென்னை, ஜூன் 21–
அண்ணா தி.மு.க.வை சிலர் வீழ்த்த முயல்கின்றனர், அந்த சூழ்ச்சிகளை முறியடிப்போம் என அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
அண்ணா தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை சர்ச்சை வெடித்துள்ள நிலையில், தகவல் தொழில்நுட்ப அணியினர் மத்தியில் பேசிய அவர், ‘அண்ணா தி.மு.க. கட்சியை பலவீனப்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். அதையெல்லாம் முறியடித்து ஐ.டி.பிரிவு துணை கொண்டு எதிர்காலத்தில் அண்ணா தி.மு.க. பலம் பொருந்தியதாக மாற்ற வேண்டும். இதற்கு ஐ.டி.பிரிவின் பங்கு முக்கியம். துணை புரியுங்கள்.
அண்ணா தி.மு.க.வின் நல்ல எதிர்காலத்தை உறுதி செய்ய உங்களுடன் பாடுபடுவேன். அண்ணா தி.மு.க.வை அழிக்க யாராலும் முடியாது. நானே முன்னின்று காத்து நிற்பேன். பலம் வாய்ந்த கட்சி அண்ணா தி.மு.க. வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை என்றார்.
இவ்வாறு எடப்பாடி பேசி இருந்த நிலையில், அண்ணா தி.மு.க.வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என அவரது முன்னிலையில் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் முழக்கமிட்டனர்.தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் முழக்கத்தை ஆமோதிப்பது போல் எடப்பாடி பழனிசாமி அமைதியாக நிற்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.