இஸ்லாமாபாத், ஏப். 30–
அடுத்த 36 மணி நேரத்தில் இந்தியா தாக்குதலை தொடங்கும் என பாகிஸ்தான் அரசை அந்நாட்டு உளவுத்துறை எச்சரித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் எதிர்வினைகளை கண்ட பாகிஸ்தான், தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்று எதிர்பார்ப்பு, அதை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இதனால் இருநாடுகளின் எல்லைகளில் பதற்றம் காணப்படுகிறது.
இந் நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் இருந்து 36 மணி நேரத்திற்குள் இந்தியா சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தலாம் என்ற நம்பகமான உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் அட்டாயுல்லா தரார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பு குறித்து ஆதாரமற்ற மற்றும் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க இந்திய அரசு தயாராகி வருகிறது.ஏற்கனவே பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாடாக இருந்து வருகிறது. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் பாகிஸ்தான் எப்போதும் கண்டித்து வருகிறது.பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணை குழுக்கள் மூலம் நம்பகமான, வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணையை நடத்த பாகிஸ்தான் முன்வந்தது. ஆனால் இந்தியா விசாரணையைத் தவிர்த்து மோதல் பாதையை தேர்ந்தெடுத்தது.இந்தியாவின் எந்தவொரு ராணுவ நடவடிக்கைக்கும் உறுதியாகவும், தீர்க்கமாகவும் பதிலளிக்கப்படும். இதனால் ஏற்படும் விளைவுகளின் பொறுப்பு இந்தியாவையே சேரும்” என்று தெரிவித்தார்.