சிவகங்கை, ஆக.9-
ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுப்படி அஜித்குமார் குடும்பத்துக்கு அரசு சார்பில் மேலும் ரூ.25 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திர காளியம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். சம்பவத்தன்று கோவிலுக்கு வந்த மதுரை திருமங்கலத்தை சேர்ந்த பேராசிரியை நிகிதா என்பவர் அளித்த நகை திருட்டு புகாரில் அஜித்குமாரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இதுதொடர்பாக மானாமதுரை தனிப்படை போலீஸ்காரர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
அவரது குடும்பத்துக்கு அரசியல் கட்சிகள் இரங்கல் தெரிவித்து, நிதி உதவி அளித்தன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஆறுதல் கூறினார். அவரது உத்தரவுப்படி அஜித்குமாரின் சகோதரர் நவீன் குமாருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை, வீட்டு மனை பட்டா மற்றும் அரசு சார்பில் ரூ.7½ லட்சம் முதற்கட்ட நிவாரணமாக வழங்கப்பட்டது.
இந்தநிலையில் அஜித்குமார் குடும்பத்துக்கு மேலும் ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்உத்தரவிட்டது. அதன்படி ரூ.25 லட்சத்திற்கான காசோலையை கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட கலெக்டர் பொற்கொடி ஆகியோர் அஜித்குமாரின் வீட்டுக்கு சென்று அவருடைய குடும்பத்தினரிடம் வழங்கினர்.
![]()





