பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் விளக்கம்
டெல்லி, டிச. 19–
7000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் வல்லமையுள்ள அக்னி–5 ஏவுகணை சோதனை பெரும் வெற்றி பெற்றிருந்தாலும், அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையில் இந்திய உறுதியாக உள்ளதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானோ அல்லது சீனாவோ அல்லது இரு தரப்புமோ ஒரே நேரத்தில் எல்லையில் பிரச்சினை தந்தாலும் துரிதமாக செயல்பட்டு முறியடிக்கும் திறனுடன் இந்திய பாதுகாப்பு படைகள் தயார் நிலையில் உள்ளன. அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் அக்னி-5 ஏவுகணை சோதனையை ஒடிசா மாநிலம் அப்துல் கலாம் தீவில் இருந்து பரிசோதித்து பார்க்கப்பட்டது.
இந்த ஏவுகணை 7,000 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று எதிரி இலக்கை துல்லியமாகக் தாக்கக் கூடியது. இந்த சோதனை வெற்றி பெற்றது குறித்து, மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) வட்டாரங்கள் கூறியதாவது:–
அணு ஆயுத கொள்கையில் உறுதி
அக்னி-5 ஏவுகணையில் அணு ஆயுதங்களை பொருத்தி தாக்குதல் நடத்த முடியும். அக்னி ரக ஏவுகணை எடை அதிகமுடையது. அதன் காரணமாக நீண்ட தொலைவுக்கு ஏவுவதில் சிரமங்கள் ஏற்பட்டன. இதை கருத்தில் கொண்டு ஸ்டீலுக்குப் பதில் வேறு உலோகங்கள் கொண்டு அக்னி-5 ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. எடை குறைந்துள்ளதால் அதன் பயண தூரமும் அதிகரித்துள்ளது. தற்போது 7,000 கி.மீ. தூரத்துக்கு அப்பாலும் இந்த ஏவுகணை சென்று தாக்கும் வல்லமையுடன் உள்ளது.
இதை எங்கு வேண்டுமானாலும் எளிதில் கொண்டு சென்று ஏவ முடியும். இந்த ஏவுகணை இந்தியாவின் வலிமையான ஏவுகணையாக மாறி இருக்கிறது. இதன் மூலம் சீன தலைநகர் பெய்ஜிங் உட்பட அந்த நாட்டின் வடக்கு பிராந்தியத்தின் எந்தப் பகுதியையும் இலக்கு வைத்து தாக்க முடியும்.
தற்போது, 7,000 கி.மீ. தூரத்துக்கு அப்பாலும் சென்று தாக்கும் வகையில் அக்னி ரக ஏவுகணைகளை மேம்படுத்த மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும். அதேநேரத்தில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் அல்லது அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இந்தியா மீது தாக்குதல் நடத்தினால், பதில் தாக்குதல் மட்டுமே நடத்தப்படும். இவ்வாறு டிஆர்டிஓ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.