ஆமதாபாத், ஜூன் 19–
ஆமதாபாத் விமான விபத்தில் பலியான 210 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குஜராத் சுகாதாரத் துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல் இன்று தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நொடிகளில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இதில், விமானத்தில் பயணித்த ஒருவரை தவிர, மீதமுள்ள 241 பேர் உள்பட 270 பேர் பலியாகினர். அவர்களின் உடல்கள் தீயில் கருகியும், சிதைந்தும் அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்ததால், டி.என்.ஏ. சோதனை மூலம் உடல்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டது. உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ. மாதிரியும், குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட டி.என்.ஏ. மாதிரியும் ஒப்பிட்டு பார்த்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பலியான 210 பேர் உடல்களின் டி.என்.ஏ. மாதிரிகள் பொருந்தி இருந்ததால், அந்த உடல்கள் அடையாளம் காணப்பட்டன.
இதுதொடர்பாக, குஜராத் சுகாதாரத் துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல் இன்று வெளியிட்ட பதிவில், இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, 210 டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரின் உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 187 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள சடலங்களை ஒப்படைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன எனத் தெரிவித்துள்ளார்.
டி.என்.ஏ. சோதனை மூலம் உடல்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என்று ஆமதாபாத் சிவில் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
![]()





